25/Jun/2021 10:20:40
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் அதிகமான விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாகுள்பட்ட வடகாடு, மாங்காடு உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பலா, வாழை சாகுபடி செய்து வருகின்றனர். சீசன் காலத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு நல்ல விலை கிடைத்து வந்தது.
ஆனால் தற்பொழுது கஜா புயல் மற்றும் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து பலாப்பழ வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்தும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் யாரும் வராததால் பலாப்பழம் வியாபாரம் ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது .
இதனால் விவசாயிகள் தங்களது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட பலாப்பழம் தற்போது வெறும் 200 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு வடகாடு உள்ளிட்ட கிராமங்களை மையமாக வைத்து குளிர் பதன கிடங்கு அமைத்து தர வேண்டும் என்றும் பலாப்பலத்துக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.