24/Jun/2021 06:13:42
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்று 5 சதவீதமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் .இதுவரை 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மாவட்டத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 1650 பேர் வரை புதியதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 686 ஆக குறைந்துள்ளது.
இதே போல மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை அடர்த்தி காரணமாக அதிக அளவில் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் வீடு வீடாக பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது.
ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 1200 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 100-க்கும் குறைவாக உள்ளது. தொற்று பாதிப்பு சதவீதத்தில் 29 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது.
தொற்று பரவல் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்ற போதிலும் இன்னும் 15 நாட்களில் நல்ல முன்னேற்றத்தை எட்டிவிட முடியும். பொதுமக்கள் தனி நபர் இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றின் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள முடியும். மாநகர பகுதியில் சுழற்சி முறையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன என்றார் அவர்.