23/Jun/2021 09:57:43
தேர்தல் தோல்விக்கு மாவட்ட நிர்வாகிகள் மீது எச்.ராஜா குற்றஞ்சாட்டியதாக்கூறி சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் தங்கள் பொறுப்பிலிருந்து கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக-வின் முன்னாள் தேசிய
செயலாளர் எச்.ராஜா 2019-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை
தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
எச்.ராஜா, தனது தோல்விக்கு கட்சி நிர்வாகிகளின்மீது குற்றச்சாட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காரைக்குடி நகரத்
தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் பாலா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர்
மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம்
கொடுத்துள்ளனர்.
பா.ஜ.க-வின் சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்வராஜுவிடம் மாநிலத் தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். பாஜக உள்கட்சி விவகாரம் வெடித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி நகர பாஜக
தலைவர் சந்திரன், பாஜக சிவகங்கை மாவட்டத்
தலைவர் செல்வராஜிடம் அளித்துள்ள கடிதத்தில், எச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும், சுயபரிசோதனை செய்து
கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.
மேலும், மாவட்ட துணை தலைவர் எஸ்.வி.நாராயணன் மூலமாக எனக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்தார். எச்.ராஜா மற்றும் அவரது மருமகன் சூர்யா ஆகியோர் என்னை
பல்வேறு நபர்கள் மூலமாக தொடர்ந்து மிரட்டி
வந்தார். இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும்
ஆபத்து நிகழும் என அஞ்சுகிறேன்.
மேலும் பதவியில் நான் தொடர்ந்து நீடித்தால் என்னை கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் என அஞ்சி எனது காரைக்குடி நகரத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கோ, எனது குடும்பத்தாருக்கோ, என்னுடன் இணைந்து பணியாற்றிய கட்சி
நிர்வாகிகளின் உயிருக்கோ
உடைமைக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு
எச்.ராஜா உள்ளிட்டவர்களே பொறுப்பாவார்கள்
எனத் தெரிவித்துள்ளார்.