21/Apr/2021 07:08:30
ஈரோடு, ஏப்: கொரானா விதிமீறலில் ஈடுபட்டதான புகாரின்பேரில் ஈரோடு அருகேயுள்ள டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு அருகே பவானியில் சமூக இடைவெளி இல்லாமல் டீக்கடையில் வியாபாரம் செய்ததால் உரிமையாளருக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், டீக்கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் பகுதியில் செயல்படும் டீக்கடையில் சமூக இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கமாக அமர்ந்து பலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்சியர் சி.கதிரவன் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்து டீக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து வருவாய் துறையினர் கடைக்குச் சென்று கடையின் உரிமையாளருக்கு ரூ. 5000 அபராதம் விதித்ததோடு கடைக்கு சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து காலிங்கரா யன் பாளையம், லட்சுமி நகர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டீக்கடைகள், மளிகை கடைகளில் வருவாய்த் துறையினர் சோதனை செய்தனர்.