logo
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்:  பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்: பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

21/Jun/2021 07:47:49

புதுக்கோட்டை, ஜூன்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின்  கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரப் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன்  ஆட்சித்தலைவர் கவிதா ராமு திங்கள்கிழமை (21.06.2021) ஆட்சியரகத்தில்  கலந்தாய்வு மேற்கொண்டார்.

 பின்னர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது:

பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்ததன் படி  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை உருவாக்கப்பட்டு பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின்  கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரப் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்துறையின் கீழ் பொதுமக்களிடமிருந்து 7,511 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக 589 மனுக்கள் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஏனைய மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மனு ஏற்பு, தள்ளுபடி மற்றும் அதற்கான காரணம் குறித்தும் தினமும் இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிக்க சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின்  கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரப்பெற்ற மனுக்களின் மீது தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் கவிதா ராமு.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர்  எம்.சந்தோஷ்குமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top