logo
ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறிய சுற்றிய 308 வாகனங்கள் பறிமுதல்:ரூ.2.13 லட்சம் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய சுற்றிய 308 வாகனங்கள் பறிமுதல்:ரூ.2.13 லட்சம் அபராதம்

21/Jun/2021 05:30:45

ஈரோடு, ஜூன்:ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறிய சுற்றிய 308 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து ரூ.2.13 லட்சம் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 28 -ஆம்  தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சசிமோகன் தெரிவித்திருந்தார்.

27-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், முக கவசம் அணியாமல் வந்த 227 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 348 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 297 இருசக்கரவாகனங்களும், 11நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில்  மட்டும் ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் அபராதம்  வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைப்போல் மாநகராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி பணியாளர்கள் ஆங்காங்கே சோதனை செய்து முககவசம் அணியாமல் வந்த 200 பேருக்கு தலா ரூ 200 அபராதம் விதித்தனர்.

இதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 10 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி செயல்பட்டகடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துகடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Top