20/Jun/2021 10:20:51
ஈரோடு, ஜூன்: மாவட்ட அதிமுகவை புறக்கணித்து ஈரோடு பகுதி கிளை சார்பில் போட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக சார்பில் இரண்டு நாள்களுக்கு முன் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளை போனில் அழைத்து
பேசி கட்சிக்கு எதிராக சசிகலா சதி செய்வதாக கூறி, அவரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மற்றும் சில பகுதி செயலாளர்கள்பங்கேற்றனர்.
முன்னாள் எம்.பி. செல்வகுமாரசின்னையன்,
முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிவசுப்பிரமணியன், கிட்டுசாமி, பூந்துறை பாலு, முன்னாள் மேயர் மல்லிகா, பகுதி
செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், பழனிசாமி
உள்பட பலர் அந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஈரோடு பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் மனோகரன் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ- பூந்துறை பாலு முன்னிலையில் சனிக்கிழமை போட்டி கூட்டம் நடந்தது. அதில், சசிகலாவின் செயல்பாட்டை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ- சிவசுப்பிரமணியிடம் மாவட்ட செயலாளர் செயல்பாடு குறித்து கட்சி நிர்வாகிகள் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.
அவர்களை சமாதானம் செய்து, சசிகலாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டத்துக்கு வந்ததாகத் தெரிவித்தார். அதிமுக பகுதி கிளை சார்பில் போட்டிக்கூட்டம் நடத்தப்பட்ட சம்பவம் ஈரோடு மாவட்ட அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.