19/Jun/2021 09:49:49
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தீப்பிடித்து கருகி சேதமடைந்த வாழை மற்றும் கரும்பு பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்குஉரிய இழப்பீடு வழங்க வேண்டுமென சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வலியுறுத்தினர்.
கந்தர்வகோட்டை அருகே நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு மற்றும் வாழை மரங்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென ஏற்பட்ட தீயால் கரும்பு மற்றும் வாழைப் பயிர்கள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று வயலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீயை முழுவதுமாக அணைப்பதற்குள் சுமார் 12 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் கருகி சேதமானது.
தகவலறிந்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ- எம்.சின்னத்துரை, வட்டாட்சியர் புவியரசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆறுதல் கூறியதோடு பாதிப்புக்கு ஏற்ப உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமெனவும் எம்எல்ஏ வலியுறுத்தினார்.