logo
தொடர் மழையால் உயர்ந்து வரும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழையால் உயர்ந்து வரும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

18/Jun/2021 04:18:34

ஈரோடு, ஜூன்: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து போனது.

இந்நிலையில் தற்போது கடந்த 6 நாட்களாக நீர் பிடிப்பு பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ‌3 நாட்களுக்கு முன் அணைக்கு வரும் நீர்வரத்து 2667 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 10,178 கன அடியாக அதிகரித்துள்ளது அணையின் நீர்மட்டம் ‌90 அடியை மீண்டும் எட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை  காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.98 அடியாகவும், நீர் இருப்பு 22.2 டி.எம்.சி யாகவும், நீர்வரத்து வினாடிக்கு 10,178 கன அணியாகவும் உள்ளது. அணையிலிருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடி நீரும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி நீர் என மொத்தம் ‌1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால்  அணையின் நீர் உயர்ந்து வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்..

Top