logo
பிபிஇ கிட்  உடை அணிந்து கொரோனா வார்டில்  ஈரோடு  மாவட்ட ஆட்சியர்  நேரடி ஆய்வு

பிபிஇ கிட் உடை அணிந்து கொரோனா வார்டில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு

17/Jun/2021 06:40:16

ஈரோடு ஜூன் : பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள  கொரோனா நோயாளிகளிடம் பாதுகாப்பு கவச உடை அணிந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்படும் கொரோனா சிகிச்சை முறைகள் குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரிசோதனை மையம்  புதிதாக 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளையும் பார்வையிட்டர். இதனை தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான பொருட்களை, அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் நேரடியாக கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தகவல் மையத்திலோ அல்லது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரிடம் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

 

Top