17/Jun/2021 04:44:05
புதுக்கோட்டை, ஜூன்: மாவட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (17.6.2001) மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
மாமேதை சமூக போராளி முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த பெருமை வாய்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சித் தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேவையான அறிவுரைகளை வழங்கி உள்ளார்கள்.
அந்த வகையில் மக்கள் நலத் திட்டங்களை விரைவாக கொண்டு சேர்த்திடும் வகையிலும், பொதுமக்கள் தெரிவிக்கும் நியாயமான கோரிக்கைகள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மாவட்டத்துக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிமாக இருப்பதால் அதை மேம்படுத்துவதிலும் மகளிர் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் டெல்டா பகுதியாக உள்ளதால் வேளாண்துறை ஆகியவை நான் முதலில் கவனம் செலுத்தும் முக்கிய பணிகளாக இருக்கும்.
நான் அருங்காட்சியக இயக்குநராகப் பணியாற்றிய போது இங்குள்ள அரசு அருங்காட்சியகத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்திய அரசின நிதி ஒதுக்கப்பட்டது. அப்பணிகளின் தற்போதுள்ள நிலைமை குறித்தும் ஆய்வு செய்வேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் தற்போதைய நிலைமையை முழுமையாக புரிந்து கொண்ட பிறகே எனது கருத்தையும் நடவடிக்கைகளையும் விளக்கமாகக் கூற முடியும் என மாவட்ட ஆட்சியர் கவிதா
ராமு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்
பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்
அபிநயா, மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சாமிநாதன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கே. பிரபாகரன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.