12/Jun/2021 09:55:50
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசியர்கள் முனைவர் ஜெயசுதா, முனைவர் சேதுராமன் ஆகியோர் பங்களிப்பில், புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில் வம்பன் நான்கு சாலையில் நடைபெற்ற நிகழ்வில் கொரானா பொது முடக்கத்தால் நலிவடைந்த 20 கிராமப்புற நாடகக் கலைஞர்கள் குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரிசி பை மற்றும் கோதுமை, சேமியா, முகக்கவசம், ஹோமியோபதி மாத்திரைகள், மற்றும் வம்பன் சிவகுமார் பங்களிப்பில் தேநீர் பாக்கெட், சர்க்கரை உப்பு ஆகிய நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மரம் நண்பர்கள் பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, பழனியப்பா கண்ணன், பொறியாளர்கள் ரியாஸ்கான், வி. இறையன்பு, நாடக கலைஞர்கள் சங்கத் தலைவர் ஆக்காட்டி ஆறுமுகம் வம்பன் சமூக ஆர்வலர் சி.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று உணவுப்பொருள்களை வழங்கினர்.
ஏற்பாடுகளை, மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள்
மருத்துவர் ஜி.எட்வின், பேராசிரியர் சா.விஸ்வநாதன் மற்றும் வம்பன்
சி.சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.