logo
ஈரோடு மாவட்டத்தில்  ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்:ரூ.62 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்:ரூ.62 லட்சம் அபராதம் வசூல்

06/Jun/2021 07:14:06

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் ரூ.62 லட்சம் அபராதம் வசூலித்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுடன் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி- தங்கத்துரை தெரிவித்திருந்தார்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட எஸ்பி தங்கதுரை கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம். மேலும் -பதிவு இன்றி வெளியே சுற்றுபவர்கள்  வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது.

 இதுவரை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ 62 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வாகன போக்கு வரத்து அதிகரித்துள்ளது.மருத்துவ காரணங்களுக்காக வாகன போக்கு வரத்து அதிகரித்துள்ளது. இப்பதிவு பெற்றால் மட்டுமே அவர்கள் வாகனம் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. இல்லையென்றால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் என்றார்  அவர்.

ஊரடங்கின் 13-ஆவது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 330 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 974 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 912 இருசக்கரவாகனங்கள் 23 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை  மட்டும் ரூ.4.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Top