logo
ஈரோட்டில் லாரி மோதியதில் சாலையில்  நடந்து சென்றவர் உடல் நசுங்கி பலி

ஈரோட்டில் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் உடல் நசுங்கி பலி

01/Jun/2021 10:54:10

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் லாரி மோதியதில் சாலையில்  நடந்து சென்றவர் உடல் நசுங்கி பலியானார்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. இதற்காக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அரிசி மூட்டை பாரம் ஏற்றிக்கொண்டு இன்று சரக்கு லாரி ஒன்று  ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த லாரி கருங்கல்பாளையம் காவேரி மீன் மார்க்கெட் அருகே வந்தபோது, அவ்வழியாக சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோதியது. இதில், நடந்து சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், இறந்து போனவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய சேலம் மாவட்டம், வழப்பாடி, பொன்னாரம் பட்டியை சேர்ந்த ரவி மகன் ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Top