01/Jun/2021 08:41:15
கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க, மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்று 11 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் தமிழகத்தில் ஜூன் 3 முதல்
6 வரை தடுப்பூசி போட முடியாது என
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று
தெரிவித்தார். இந்நிலையில்
பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி
விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதுவரை
கிட்டத்தட்ட 3.1 சதவீதம்
பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டு
தவணைகளும் செலுத்தப்பட்டுள்ள
நிலையில், தற்போது தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி தடுப்பூசி நிறுவனங்கள் லாபமடைய
முயற்சிக்கின்றன. மாநிலங்களுக்கு
போதிய தடுப்பூசிகளை வழங்கும் கடமையில் இருந்து
தன்னை விடுவித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் மத்திய
அரசு
ஈடுபடுகிறது என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் அவர், தடுப்பூசிகளை வாங்கி,
அவற்றை மாநிலங்களுக்கு விலையில்லாமல் வழங்கி இலவச தடுப்பூசி திட்டத்தை
உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு அனைவரும்
அழுத்தம் தர வேண்டும். அதற்கு அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியே தற்போதைய
அவசியத் தேவையாக உள்ளது என்று அக்கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி
விஜயன் தெரிவித்துள்ளாா்.