01/Jun/2021 01:48:30
புதுக்கோட்டை, மே: மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்களிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரிவெளியிட்ட தகவல்: கொரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதலின்படி
தமிழ்நாட்டில் கடந்த
24.5.2021 முதல் தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகிறது. இந்த முழு ஊரடங்கு 7.6.2021 காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நடமாடும் காய்கறிகள், பழங்கள் விற்பனை தொடர்புடைய துறையினர் மூலம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று மளிகைப் பொருட்கள் அந்தந்த
பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள்
அல்லது தள்ளுவண்டி மூலமாக உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன்,
குடியிருப்புப் பகுதிகளுக்குச்
சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும்
தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை அவர்களது வீடுகளுக்கே
சென்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையரிடமும், கிராமப்புற மற்றும் பேருராட்சி பகுதிகளில் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.