27/May/2021 09:55:40
ஈரோடு, மே: மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு ஈரோடு மாநகர் பகுதியில் 100 தள்ளு வண்டிகளில் காய்கனி, பழங்கள் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தொற்றின் 2-ஆவது அலையை கட்டுப்படுத்த தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே காய்கறி, மளிகை பொருட்கள் தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், ஈரோடு மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் காய்கறிகள், மளிகை பொருட்கள் முதல் நாளில் 140 வாகனங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் மக்கள் நெருக்கடியாக இருக்கும் பல்வேறு பகுதிகளிலும் ,தெருக்கள், சந்தை பகுதிகளுக்கு காய்கறிகள் வாகனங்கள் வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநராட்சிப்பகுதிகளில் 190 வாகனங்களில் காய்கறி, 40 வாகனங்களில் பழங்களும், 20 வாகனங்களில் மளிகை பொருட்கள் என 250 வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை
நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் 100 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு வியாழக்கிழமையிலிருந்து மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கியமான தெருக்கள், வீதிகள் சந்தைகளில்
உள்ள மக்களுக்கு தள்ளு வண்டிகளில் காய்கறிகள்,
ஆப்பிள், ஆரஞ்சு , வாழை போன்ற பழ வகைகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.