logo
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கில் வெளியே சுற்றிய 1200 வாகனங்கள் பறிமுதல்:ரூ.5.75 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கில் வெளியே சுற்றிய 1200 வாகனங்கள் பறிமுதல்:ரூ.5.75 லட்சம் அபராதம் விதிப்பு

25/May/2021 07:13:44

ஈரோடு, மே:ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கில் வெளியே சுற்றிய 1200 வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும், ரூ.5.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நேற்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி- தங்கத்துரை தெரிவித்திருந்தார்.

இதன்படி , ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம்,ஜி. ஹெச். ரவுண்டானா, காளைமாடு சிலை சந்திப்பு, சோலார், ரிங் ரோடு போன்ற பகுதிகளிலும்   போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். -பதிவு பெற்றிருந்தாலும் கடும் சோதனைக்கு பிறகே தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

இருந்தாலும் முழு ஊரடங்கு பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிந்தனர். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஏதோ சாக்கு போக்கு சொன்னார்கள். இதையடுத்து போலீசார் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்கள், கொரோனா தடுப்பு முறைகளை மீறியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் முழு ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறியதாக ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கின்  போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய தாக  மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் 1050 இருசக்கர வாகனங்களும், 150 நான்கு சக்கர வாகனங்களும் ஆகும். இதைப்போல் முக கவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து 60,000 வசூல்  செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ. 15 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் ஏராளமானோர் ஊரடங்கை மீறி சுற்றிக் கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Top