logo
முழு ஊரடங்கால்  ஈரோட்டில் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் 2 ஆயிரம் மடி தொழிலாளர்கள்

முழு ஊரடங்கால் ஈரோட்டில் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் 2 ஆயிரம் மடி தொழிலாளர்கள்

25/May/2021 06:29:05

ஈரோடு, மே: முழு ஊரடங்கால்  ஈரோட்டில் 2 ஆயிரம் மடி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ஈரோடு பகுதியில் ஜவுளி தொழில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதனை நம்பி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக இந்த தொழிலாளர்கள் தற்போது வேலை வாய்ப்பின்றி உள்ளனர்.

இந்நிலையில் ஜவுளித்தொழிலில் முக்கிய பணிகளை மேற் கொள்பவர்கள் மடி தொழிலாளர்கள். வேட்டி, லுங்கி, சேலைகள், காடாத்துணிகளை மடிக்கும் தொழிலில் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநகரப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

அன்றாடக் கூலி அடிப்படையில் பணி மேற்கொள்ளும் இவர்களுக்கு துணி உற்பத்தி இருந்தால் மட்டுமே வேலை இருக்கும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் இந்த 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இந்நிலையில் தற்போது முழு ஊரடங்கு துவங்கியதாலும், துணி உற்பத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டதாலும், குறைக்கப்பட்டதாலும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் வீட்டு வாடகை, உணவு கூட செலவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு எங்கள் நிலையை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top