19/May/2021 02:01:15
ஈரோடு, மே: ஈரோடு கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு மருத்துவ ஆலோசனை பெற கடந்த 2 நாள்களில் ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. அதன்படி திங்கள்கிழமை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கொரோ னா கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) திறக்கப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் கொரோனா சிகிச்சை பெற ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதி குறித்தும், தடுப்பூசி குறித்தும், பரிசோதனை குறித்தும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்து மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்த 10 தொலைபேசி எண்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் பொதுமக்கள் நேரம் காலம் பார்க்காமல் கொடுக்கப்பட்டுள்ள 10 தொலைபேசி எண்களில் தங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- மாநகராட்சி ,கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவு போன் அழைப்புகள் வருகிறது. பெரும்பாலானோர் காய்ச்சல் வந்த நிலையில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை வழங்க மறுப்பதாகவும், சில மருந்துகள் எங்கு கிடைக்கும் என்றும் கேட்டனர்.
மேலும் சிலர் தடுப்பூசி போடுவது குறித்தும் பரிசோதனை எங்கு மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் கேட்டனர். இன்னும் சிலர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எந்த மருத்து வமனையில் இருக்கும் விவரத்தை கேட்டு தெரிந்து கொண்டனர். 2 நாள்களில் மட்டும் மருத்துவ ஆலோசனை பெற இந்த கட்டுப்பாடு அறைக்கு சுமார் 1000 -க்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.