18/May/2021 06:53:18
புதுக்கோட்டை:
கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள அச்சமின்றி அனைவரும் தடுப்பூசி
போட்டுக்கொள்ள வேண்டும் என்றார் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சர் சிவ.வீ.மய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பெரியார்நகர், செரியலூர் ஜமீன் ஊராட்சியில் மருத்துவமுகாமை புதன்கிழமை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:
புதுக்கோட்டை
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம்
முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதுடன் தடுப்பூசியும்
போடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை
மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகள், 8 பேரூராட்சிகள் 2 நகராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நோய் தொற்றை தடுக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கீரமங்கலம், செரியலூர் ஜமீன் ஆகிய ஊராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவை தற்காலிக தீர்வாகும். தடுப்பூசி போட்டுக்கொள்வதே நிரந்தர தீர்வு. தடுப்பூசியால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.எனவே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம். தடுப்பூசி போட்ட பிறகு பாதிப்பு ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. முதல்வர் ஸ்டாலின் தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்று பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதை அிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து,
கீரமங்கலம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்வில்,
புதுக்கோட்டை வருவாய்
கோட்டாட்சியர் டெய்சிகுமார்,
சுகாதார துணை இயக்குநர் விஜயக்குமார்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.