10/May/2021 05:03:27
ஈரோடு, மே: கொரோனா நிவாரண தொகை வழங்குவதற்காக ஈரோடு மாவட்டத்தில் வீடுவீடாக டோக்கன் வினியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.
தி.மு.க.தேர்தல் அறிக்கையில், அரிசி வாங்கும் அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் ஜூன்- 3 முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், இம்மாத இறுதிக்குள் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், திங்கள்கிழமை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் உதவிடும் வகையில், உடனடியாக கொரோனா நிவாரணத் தொகை ரூ. 2,000-ஐ வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,152 ரேஷன் கடைகளில், 7 லட்சத்து 13 ஆயிரத்தி 910 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2,000 வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்தார்.
ஊரடங்கு காலத்திலும் ரேஷன் கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் நிவாரண தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மே10 முதல் வரும் 12-ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
அதில் தொகை பெறுவதற்கான நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நாட்களில் அந்த குறிப்பிட்ட பகுதிையை சேர்ந்த மக்கள் வந்து நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோக்கன் வினியோகிக்கும் பணி முடிந்தவுடன் வரும் 15-ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணத் தொகை வழங்கப்படும்.