06/May/2021 03:09:34
ஈரோடு, மே: தடையை மீறி கூடிய ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை தொடங்கிய சில மணி நேரங்களில் மூட மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை கறவை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளனமான வியாபாரிகள் வருவார்கள். இது மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கோவா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.
சாதாரண நாட்களில் 800-க்கும் மேற்பட்ட மாடுகள் வரும். ரூ.3 முதல் 4 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கடந்த மாதம் தேர்தல் நடத்தை விதிமுறை என்பதால் மாட்டுச்சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைய டுத்து கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாட்டு சந்தை வியாபாரம் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் குறைந்த அளவிலேயே வர்த்தகம் நடைபெற்று வந்தது. தொற்று வேகமெடுத்துள்ளதால் கடந்த வாரம் சந்தை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வாரம் வியாழக்கிழமை சந்தை வழக்கம் போல் கூடியது. ஆனால் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் ஒருவர் கூட வரவில்லை. கொரோனா தாக்கம், இ- பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் வியாபாரம் மந்த நிலையே நடந்தது.
இதுகுறித்து மாட்டுச்சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: கொரோனா தாக்கம் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் வந்திருந்த ஒரு சில வியாபாரிகள் மட்டுமே மாடுகளை வாங்கிச் சென்றனர்.
இன்று கூடிய சந்தையில் வெளிமாநில
வியாபாரிகள் ஒருவர் கூட வரவில்லை. பசுமாடு
100, எருமை மாடு 300, கன்று 50 என மொத்தம் 450 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு
வந்திருந்தன. பொதுவாக 700 முதல் 800 மாடுகள் விற்பனைக்கு
வரும் நிலையில் தற்போது குறைந்த அளவே
மாடுகள் வந்திருந்தன.
இதனால் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 75 சதவீதம் மக்கள் மட்டுமே விற்பனையாகின. சந்தைக்கு மாஸ்க் அணிந்து வரும் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் அவர்களின் உடல் வெப்பநிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. லாரிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களது பெயர் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள். உடல் வெப்பநிலை அளவும் குறித்து வைத்து வருகிறோம் என்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தலைமையில் கருங்கல்பாளையம்
மாட்டுச் சந்தைக்கு நேரடியாக சென்ற அதிகாரிகள் மாட்டு சந்தை நடத்த அனுமதி இல்லை. உடனடியாக சந்தையை
மூட வேண்டும் இல்லையென்றால் மாடுகள்
பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து சந்தையில் இருந்து மாடுகள்
வேகமாக வெளியேற்றப்பட்டன.
அனுமதியில்லாமல் மாடுகளை
கொண்டு வந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.