logo
 ஈரோடு மாவட்டத்தில் முழு ஊடரங்கில் வெளியே சுற்றித்திரிந்த  150 பேருக்கு அபராதம்-50 வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊடரங்கில் வெளியே சுற்றித்திரிந்த 150 பேருக்கு அபராதம்-50 வாகனங்கள் பறிமுதல்

26/Apr/2021 06:41:44

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் முழு ஊடரங்கின்போது  தேவையின்றி  வெளியே சுற்றித்திரிந்த  150 பேருக்கு  போலீஸார் அபராதம் விதித்ததுடன் 50 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேர ஊரடங்கில் மட்டும் தேவை இல்லாமல் வெளியே சுற்றியதாக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டனஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கின் போது அனாவசியமாக சாலையில் நடமாடினாலோ, வாகனங்களில் சுற்றினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி. தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 இதற்காக ஈரோடு மாவட்ட , மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், சென்னிமலை ரோடு, காளைமாடு சிலை, மணிக்கூண்டு  பேருந்து நிலைய பகுதி, கருங்கல்பாளையம் காவிரி கரை சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஈரோடு ஜிஹெச் ரவுண்டானா பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.


இதைப்போல் மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர்  சாலைகளில்   நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் மோட்டார் பைக்கில்  தேவையில்லாமல் சுற்றித்திரிந்த  சில இளைஞர்களுக்கு  அபராதம் விதித்தனர்.

அதேநேரம் அவசர தேவைக்கு சென்றவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை மீறியதாக 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Top