22/Apr/2021 06:38:12
ஈரோடு ஏப்: கொரோனா தொற்று காரணமாக ஈரோட்டிலுள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை மூடப்பட்டது.
ஈரோடு காந்திஜி சாலையில் இயங்கி
வரும்
மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு
வந்தது. மேலும் ஒருபுறம் கொரோனா பரிசோதனையும், மற்றொரு
புறம் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனைக்கு ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதியை ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த இரு கர்ப்பிணிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அப்பெண்களை பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிற கர்ப்பிணிகள், நோயாளிகள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி மையம், கொரோனா பரிசோதனை மையமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை மீண்டும் வரும் சனிக்கிழமை(ஏப் 24) மீண்டும் திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.