logo
வெளிமாநில வியாபாரிகள் வருகையின்றி ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு

வெளிமாநில வியாபாரிகள் வருகையின்றி ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு

21/Apr/2021 07:51:22

ஈரோடு, ஏப்: வெளிமாநில வியாபாரிகள் வருகையின்றி ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் (ஜவுளி சந்தை)செயல்பட்டு வருகின்றது. நிரந்தர ஜவுளிக்கடைகள் மற்றும் வாரச்சந்தை கடைகள் என தனித்தனியாக  செயல்பட்டு வருகின்றது. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் ஜவுளி சந்தையானது செவ்வாய்கிழமை மதியம் வரை நடைபெறுவது வழக்கம். 

வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கா்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு ஜவுளி சந்தையில் கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் கெடுபிடிகளால் ஜவுளி சந்தையில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  இரவு  நேரங்களில் ஜவுளி சந்தை கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஜவுளி சந்தை தொடங்கியது.வெளிமாநில வியாபாரிகள் வராததால்  மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.

 இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: வழக்கமாக ஜவுளி சந்தையானது திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை பகலில் முடிவடையும். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  திங்கள்கிழமை  இரவில் சந்தையை நடத்த  மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. இதனால் வேறுவழியின்றி  செவ்வாய்க்கிழமை  பகலில் தான் கடைகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 


கொரோனா இரண்டாவது அலை காரணமாக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. சில்லரை வர்த்தகமும் மட்டும் சொற்ப அளவில்தான் நடந்தது.

ஏற்கனவே தேர்தல் காலத்தில் பறக்கும்படை அதிகாரிகளின் கெடுபிடிகளால் ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்து நிலைமை சரியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவல் வியாபாரத்தை முழுமையாக முடக்கிவிட்டது. தொடர்ந்து இரண்டாவது வாரம் மொத்த ஜவுளி வியாபாரம்  பாதிக்கப்பட்டுள்ளது ஜவுளிகள் நுகர்வை பொருத்து தான் உற்பத்தியும் நடைபெறும்  என்றார் அவர்.

Top