16/Apr/2021 11:38:48
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை இயங்கி வரும் டாம்ப்கால் மருந்து தயாரிப்பு நிலையத்திலிருந்து 19 தென் மாவட்டங் களுக்கு கபசுர குடிநீர் பொடிகள் விநியோகம் செய்யப்படுகிறது என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.
புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாம்ப்கால் மருந்து தயாரிப்பு நிலையத்தினை வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் மேலும் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் மருந்துதயாரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் தினந்தோறும் 450 கிலோ வீதம் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று காலங்களில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் தயாரித் து வழங்கப்பட்டு வருகிறது. இந்த டாம்ப்கால் மருந்து செய் நிலையத்தின் மூலம் நிலவேம்பு குடிநீர் 9 வகையான சித்த மருத்துவ மூலிகைகளை கொண்டும், கபசுர குடிநீர் 15 வகையான மூலிகைகளை கொண்டும் தயாரிக்கப்படுகிறது.
தற்பொழுது இந்நிலையத்தில் 7,000 கிலோ நிலவேம்பு குடிநீரும், 3,000 கிலோ கபசுர குடிநீரும் கையிருப்பில் உள்ளதுடன் ½ கிலோ அளவில் பைகளில் அடைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.அரசால் தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி .
இந்த ஆய்வின்போது இணை இயக்குநர்(ஊரக நலப்பணிகள்) மரு.ராமு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொது சுகாதார துணை இயக்குநர் பா.கலைவாணி, டாம்ப்கால் சிறப்பு அலுவலர் மோகன், நகராட்சி பொறி யாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.