11/Apr/2021 09:51:25
ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மீன் வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன் இறைச்சி கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் 2-ஆவது ஆலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் 85பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் மீன் மார்க்கெட், மீன் இறைச்சி கடைகள் ஞாயிற்றுகிழமை இயங்காது. அன்றைய தினம் மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விட வேண்டும் எனவும், மீதமுள்ள நாட்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் எனவும், கோழி, ஆடு மற்றும் இதர இறைச்சி கடைகளில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பார்சல் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, ஈரோடு மாநகரில் ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட், காவேரி ரோடு மீன் மார்க் கெட், நகர் பகுதியில் இயங்கும் இதர மீன் கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி இன்று விடுமுறை விடப்பட்டு, மூடப்பட்டிருந்தது. இதேபோல், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மீன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.
மேலும், கோழி, ஆடு இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே பார்சல் மூலம் விற்பனை நடைபெற்றது. இந்த கடைகளில் விற்பனையாளர்கள் முக கவசம், கையுறை அணிந்து விற்பனை செய்கின்றார்களா, வாடிக்கையாளர்கள் சமூக விலகலையும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுகிறார்களா என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.