20/Mar/2021 11:07:36
ஈரோடு, மார்ச்: மக்கள் கூட்டத்தை குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ரயில்நிலை நடைமேடை நுழைவுக்கட்டணம் ரூ.50 ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமுறைக்கு வந்தது.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவிலும் ஊடுருவி வேகமாக பரவி வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக ரயில் சேவைகள் மூடங்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். பின்னர் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. ஆனால் சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலக்கட்டம் என்பதால் ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரயில் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைப்போன்று பிளாட்பாரம் டிக்கெட் ரூ 10- க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் பிளாட்பாரம் டிக்கெட் இன்று முதல் ரூ. 50 உயர்த்தி கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
அதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ. 50 - க்கு விற்கப்பட்டது. இது தெரியாமல் வந்த சில பயணிகளுக்கு இந்தக் கட்டண உயர்வு தெரியவந்தது. பிளாட்பாரம் டிக்கெட் வினியோகம் செய்வதற்காக தனியாக கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.