09/Apr/2021 10:53:42
ஈரோடு, ஏப்: ஈரோடு மாநராட்சிக்குள்பட்ட வீரப்பன்சத்திரம் பாரதி திரையரங்கப் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி வணிகர்கள் மனு அளித்தனர்
ஈரோடு வீரப்பன்சத்திரம் அனைத்து வணிகர்கள் சங்கப் பிரதிநிதிகள் மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவனிடம் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சியில் கடந்த 2008 -இல் புதை சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப் பட்டது. 14 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் நடைபெற்று வருகிறது. இதைப்போல் ஈரோடு மாநகராட்சிகுள்பட்ட வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் சாலையில் குழாய் அமைப்பதற்காக 175 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த சாலை இதுநாள்வரை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக இருப்பதுடன் வாகனங்கள் செல்லும் போது கிளம்பும் புழுதியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுவாசப்பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் உள்ள கடைகள் புழுதி பிரச்சனையால் மூடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வியாபாரிகள் சாலை பழுதால் தற்போது மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி இனிப்பு வழங்கி நூதன முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த போராட்டத்தை கைவிட்டு மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.