09/Apr/2021 05:51:47
ஈரோடு, ஏப்: சட்டமன்ற தேர்தலுக்காக 3 நாள்கள் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து நடந்த மதுபான விற்பனை ஒரே நாளில் ரூ,6 கோடியை எட்டியது.
தமிழக சட்ட:மன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் 6-இல் நடைபெற்றது.. தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. . அதன்படி கடந்த 4-ஆம் தேதி முதல் முதல் வரும் 6-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைப் போன்று பார், ஹோட்டல் இயங்கும் மதுக்கூடங்களும் மூடப்பட்டன.
விடுமுறை நாட்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நாளும் இங்கு சராசரியாக ரூ. 4 கோடி வரை விற்பனையாகி வருகிறது. பண்டிகை விசேஷ காலங்களில் ரூ 6 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும். இந்நிலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. மதுப் பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு வேண்டிய மதுவகைகளை அள்ளிச் சென்றனர்.
அன்று ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ. 12 கோடிக்கு மதுபான விற்பனை ஆகியிருந்தது. இந்நிலையில் மூன்று நாட்கள் விடுமுறை பிறகு வழக்கம் போல் ஏப்.7-இல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
மூன்று நாள்கள் கழித்து திறக்கப்பட்டதால் காலையில் மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நண்பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் கூட்டமின்றி காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் இருந்தது. திறந்த முதல்நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ 5 கோடியே 99 லட்சத்து 48 ஆயிரத்து 950 ரூபாய்க்கு மது விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.