07/Apr/2021 05:29:02
புதுக்கோட்டை, ஏப்ரல்: புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட அடப்பன்வயல் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணியில் அந்நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் பால் பண்ணை பகுதியில் புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், செல்போன் டவர் அமைக்கும் பிரச்னையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது