logo
ஈரோடு மாவட்டத்தில்  45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

01/Apr/2021 01:52:34

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில்  45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள்  முதற்கட்டமாக பயன்பாட்டுக்கு வந்தன. ஈரோடு மாவட்டத்தில் முதலில் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஈரோட்டில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என 24 மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 இந்நிலையில் (ஏப்.1) வியாழக்கிழமை முதல்  45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்திருந்தனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும்  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக அந்த மையத்திற்கு சென்று தங்களுக்குரிய ஏதாவது  ஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் எனவும், தனியார் மருத்துவமனையில் ரூ. 250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

Top