01/Apr/2021 01:43:02
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் 2 -ஆவது கட்டமாக இன்று 80 முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுக்களை தபால் மூலம் செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 62 பேரும், மாற்றுத்திறனாளிகள் 14,597 பேரும் உள்ளனர். இதில் 5435 பேர் தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இவர்களுக்கு தபால் ஓட்டு அதற்கான ஒப்புதல் படிவம் போன்றவை இணைத்து திங்கள்கிழமை மாவட்ட அளவில் விருப்பம் தெரிவித்த வாக்காளர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை பெற்றனர். இதில் 2,679 பேர் வாக்களித்தனர். இதில் விடுபட்டவர்களுக்கு அதிகாரிகள் அவர்கள் வீட்டுக்கு நேரில்சென்று மீண்டும் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக 80 வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. காலை 8 மணிக்கு இந்த பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியிலும் வாக்கு சேகரிக்கும் குழுவினர் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெற்று பதிவு செய்தனர்.இந்த பணி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பின்னர் வாக்களித்த தபால் பெட்டி பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.