logo
ஈரோடு மாவட்டத்தில் 80 வயது கடந்தவர்கள்,மாற்றுத் திறனாளிகள் உள்பட  5,435 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம்

ஈரோடு மாவட்டத்தில் 80 வயது கடந்தவர்கள்,மாற்றுத் திறனாளிகள் உள்பட 5,435 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம்

27/Mar/2021 07:58:10

ஈரோடு, மார்ச்: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலில் ஓட்டு சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து இந்த பணிகள் துரிதமாக நடந்து வந்தன. ஈரோடு மாவட்டத்திலும் இதற்கான பணிகள் நடந்து வந்தன. 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் (தனி) ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 597 பேரும் உள்ளனர்.

இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏதுவாக 12 டி படிவம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8  சட்டமன்ற தொகுதியில் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 80 வயதுக்கு மேற்பட்ட 4,413  வாக்காளர்களிடம் இருந்தும், 1022 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களிடம் இருந்து மொத்தம் 5,435  பேர் தபால் மூலம் ஓட்டு போட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 324 பேரும், மேற்குத் தொகுதியில் 756 பேரும், மொடக்குறிச்சியில் 1097 பேரும், பெருந்துறையில் 1038 பேரும், பவானியில் 640 பேரும், அந்தியூரில் 341 பேரும், கோபியில் 967 பேரும், பவானிசாகரில் 272 பேரும் என 5 ஆயிரத்து 435 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சி தொகுதியில் 1097 பேரும், குறைந்தபட்சமாக பவானிசாகரில் 272 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேற்படி வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் சார்பில் வாக்கு சேகரிக்கும் குழு அவர்களது முகவரிக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகச் சென்று தபால் வாக்குகளை வழங்கி வாக்களித்த பின் திரும்ப சேகரித்து செல்வார்கள்.

வாக்கு சேகரிக்கும் குழுவில் மண்டல அலுவலர் கண்காணிப்பாளராகவும், இரண்டு வாக்கு சேகரிக்கும் அலுவலர்கள், நுண் கண்காணிப்பு அலுவலர், வீடியோ கிராபர், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் உடன் வருவார்கள்.

 மேலும் சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் உடனிருந்து இதை கண்காணிக் கலாம். நாளை தபால் வாக்குப் போட முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள்  வரும் 31ஆம் தேதி (புதன்கிழமை) மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வாக்கு சேகரிக்கும் குழுவினர் வருவார்கள் அப்போது அவர்கள் வாக்கை பதிவு செய்து கொள்ளலாம்.

Top