26/Mar/2021 10:58:37
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பல கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார் அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம்.
ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் ஆயமேடு, ஆலுச்சாம் பாளையம், கணக்கன்காடு, தயிர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, வேட்டுவபாளையம், சாமிகவுண்டன்பாளையம் பகுதியில், கூட்டணி கட்சியின ருடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக் கும் வகையிலும், விபத்தை தடுக்கவும், ஈரோடு அரசு மருத்துவமனை அருகே, 58.54 கோடி ரூபாயில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில், 165 கோடி ரூபாயில், 809.16 கி.மீ தொலைவுக்கு புதை வட மின் கேபிள் பதிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மேற்கு தொகுதி மக்கள் வைத்து கோரிக்கையின் அடிப்படையில், வீட்டு வசதி வாரியம் சார்பில், பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை போன்ற பகுதியில், 125.89 கோடி ரூபாயில், 1,072 குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் சாக்கடை கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 115 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து முடியும் நிலையில் உள்ளது. விரிவாக்கப்பகுதிக்கும், அதனை ஏற்படுத்த திட்ட வரைவு தயார் நிலையில் உள்ளது.
கடந்த, பத்து ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் நடந்துள்ளது. மேலும், நல்ல பல திட்டங்களை செயல்படுத்த அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் கே.வி. ராமலிங்கம். இதையடுத்து, நசியனுார் சாலை, பெரியார் நகர், சிந்தன் குட்டை, தொட்டிபாளையம், நெசவாளர் காலனி, தொட்டிபாளையம் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.