27/Feb/2021 06:31:36
புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடி அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டயதில் மாடுபிடிவீரர்கள்
10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரம் கருப்பர், முனீஸ்வரர்
கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் உள்ள அம்புலி
ஆற்றுப்பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. போட்டியை
வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார்.இதில், புதுகை, திருச்சி, தஞ்சை,
மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 510 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில்
இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 175 வீரர்கள் அணி அணியாகக் கலந்துகொண்டு அடக்க
முயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில் 10 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு
அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். வீரர்களின் பிடியில்
சிக்காமல் போக்குக்காட்டிய காளைகளும், திமிறிய காளைகளின் திமிலைப்பிடித்து அடக்கிய
வீரர்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விதிகளுக்கு
உட்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா
தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர்
பார்வையிட்டனர்.