logo
உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் கையாள்வது  குறித்த அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் கையாள்வது குறித்த அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

14/Mar/2021 07:59:10

சென்னை: உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன என்று அறிக்கையாக அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள, உரிமை கோரப்படாத உடல்களை, 10 நாட்களுக்கு பின்  உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்று வழக்கு விசாரணையை 3  வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், உரிமை கோரப்படாத உடல்கள் மருத்துவமனைகளில் எப்படி  கையாளப்படுகிறது என்பது குறித்தும், இது தொடர்பான விதிகளுடனும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Top