logo
தேர்தல் நடத்தை விதிகள்: ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்த செல்ல  முடியாததால் ஈரோட்டில் மஞ்சள்-ஜவுளி வர்த்தகம் வீழ்ச்சி

தேர்தல் நடத்தை விதிகள்: ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்த செல்ல முடியாததால் ஈரோட்டில் மஞ்சள்-ஜவுளி வர்த்தகம் வீழ்ச்சி

09/Mar/2021 06:17:33

ஈரோடு, மார்ச்:  தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வியாபாரிகள்  ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்த செல்ல  முடியாததால் ஈரோட்டில் மஞ்சள்-ஜவுளி வர்த்தகம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

  ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்களில் விவசாயிகள் தங்களது மஞ்சளை ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிற்னர். இங்கு விவசாயிகள் விற்பனை செய்யும் மஞ்சளுக்கான தொகை ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது.

ஆனால், மசாலா பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்புக்கான தேவைக்கு 10 குவிண்டால் முதல் 20 குவிண்டால் வரை மஞ்சள் கொள்முதல் செய்யும் குடிசைத்தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோர் பெரும்பாலும் பணத்தை கையில் எடுத்து வந்து தான் செலுத்தி மஞ்சளை வாங்கி செல்வர்.

 இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து அனைத்து சோதனை சவாடிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுக்கள் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு  அதிக கெடுபிடி காட்டி வருகின்றனர். 

இதன்காரணமாக, மஞ்சள் கொள்முதல் செய்யும் விவசாயிகள் பணத்தை எடுத்துச்செல்ல இயலாமல் முடங்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மஞ்சள் வணிகம் பாதிப்படைந்துள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் மஞ்சள் வணிகர்கள் மற்றும் விவசாயிகள் ரூ.1 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைப்போல்  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில்  கூடிய ஜவுளி சந்தையும் வெளிமாநில வியாபாரிகள் இன்றி மந்தமாக நடந்தது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்து துணிகளைக் கொள்முதல் செய்து செல்வார்கள். ஏற்கெனவே கொரோனா தாக்கம் காரணமாக மகாராஷ்டிர, கேரள வியாபாரிகள் கடந்த சில வாரங்களாக வருவதில்லை. 

இச்சூழல் நிலையில், தற்போது சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ .50 ஆயிரத்துக்கு மேல் வியாபாரிகள் பணம் கொண்டு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் தற்போதுள்ள  சந்தையில் வெளிமாநில வியாபாரிகளின்றி  காணப்பட்டது. மேலும் ஒரு சில உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். எனவே வியாபாரம் மந்தமாக நடந்தது. இனி தேர்தல் முடிந்து பழைய நிலைமை திரும்பினால் தான் வியாபாரம் மீண்டு எழும்  என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Top