07/Mar/2021 09:41:01
ஈரோடு, மார்ச்: மதவெறி பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க மதசார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா.
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோழர் தா.பாண்டியன் நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் அவர் பேசியதாவது: பாஜக சாதி கட்டமைப்பை காப்பாற்றி ஒவ்வொரு சாதியையும் மத வெறி அரசியலுக்கு உட்படுத்த முயற்சிக்கிறது.
அம்பேத்கர் அளித்த சட்டம் இந்திய நாடு மதசார்பற்ற குடியரசு நாடு என இலக்கணப் படுத்துகிறது.. ஆனால் மோடி ஆட்சி அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்தெறிகிறது. இதனை தடுத்து நிறுத்தி நாட்டையும், அரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். மத வெறி சக்திகள் தேர்தலில் வெற்றி் பெற கூடாது. மதசார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும். மதவெறி பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.
இந்த ஆட்சியில் பொது துறை நிறுவனங்கள் தனியார் மயமாகின்றன. இட ஒதுக்கீடு் கொள்கை தகர்க்கப்படுகிறது. இட ஒதுக்கீடு இல்லாமல் செய்ய மோடி அரசு இதை செய்கிறது. இட ஒதுக்கீடு் இருப்பதால் தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் தான் முதலிலிருந்தே இட ஒதுக்கீடு் பின்பற்றப்பட்டு வருகிறது. இதை தகர்த்தால் சமூக நீதி இருக்காது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொள்கையை இந்த அரசு பின்பற்றுகிறது. அம்பானி, அதானி போன்றோர்கள் கொள்ளையடிக்க மோடி ஆட்சி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆட்சியில் இயற்கை வளங்கள் கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இந்தியாவை ஆட்டி படைக்கும் மதவெறி பாசிசம் ஒரு சவாலாக இந்த தேர்தலில் உள்ளது. பாஜக அதிமுக அணியானது மதவெறி பாசிச கொள்கைக்காகவும், முதலாளித்துவம் வளர்க்கவும் உருவாகி உள்ளது.
பாஜக, பாட்டாளி என பெயர் வைத்திருக்கும் கட்சி உள்பட அனைவருக்கும் ஒரு கேள்வி. மக்களின் நலனுக்கான கூட்டணியா இது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மதசார்பற்ற திமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். அந்த அணிவெற்றி பெறுவது தான் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நல்லது என்றார் டி. ராஜா. இதில், த.ஸ்டாலின்குணசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.