logo
ஆலங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்  முகம்மது நபி(ஸல்) யின் வாழ்க்கை வரலாறு தொடர் பிரசாரம்

ஆலங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முகம்மது நபி(ஸல்) யின் வாழ்க்கை வரலாறு தொடர் பிரசாரம்

07/Mar/2021 07:54:32

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கிளை சார்பில்   முகம்மது நபி(ஸல்) யின் வாழ்க்கை வரலாறு தொடர் பிரசாரம்  கூட்டம் மங்கள மஹாலில் (இஸ்திஜிமா) நடைபெற்றது. 

 மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் முகம்மது மீரான் பொருளாளர் முஹம்மது பாரூக் முன்னிலை  வகித்தனர்.

 பேச்சாளர்கள் இல்யாஸ்,அபூபக்கர் சித்தீக் ஷஆதி,அப்சானா,  பாத்தீமா ஜான் ஆகியோர்   முகம்மது நபி(ஸல்) யின் வாழ்க்கை வரலாறு  குறித்து சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில்  பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:    தினசரி பெட்ரோல்,டீசல் ,கேஸ் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதனால் மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து நடுத்தர மக்கள் வாழவழியில்லாத நாடாக மாறி வருகிறது இதற்கு மத்திய மாநில அரசுகள் தங்களுடைய வரிகளை குறைத்து அண்டை நாடுகளில் விற்கும் விலைகளுக்கு ஏற்ப இந்தியாவில் விற்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஹம்மது நபியை இகழ்ந்து பேசுவதால் நபியின் புகழ் மங்காது அது மென்மேலும் ஓங்கும் என்பதை பறைசாற்றும் வகையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றை தரணி எங்கும் எடுத்துச் சொல்லும் விதமாக பிப்ரவரி 3 முதல் ஏப்ரல் 3 வரை அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்) என்ற செயல்திட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது. இந்த பிரசாரங்களை சிறந்த முறையில் வீரியத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

  இந்திய நாட்டை உருவாக்கியதிலும் , நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது.  அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. உடனடியாக இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்றால் இச்சட்டத்திற்கு எதிரான தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும்.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிக வருவாய்களை ஈட்டித்தருகிற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தொடர்ந்து தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறது.  இரயில்வே துறை , விமானம் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான பல்வேறு துறைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருவதை  வன்மையாக கண்டிக்கிறோம். முந்தைய அரசுகள் கடைபிடித்தது போல் பொதுத்துறை நிறுவனங்களை அரசே முன்னின்று நடத்த வேண்டும்.

 ஆலங்குடி  கலிப்புல்லா நகர் பகுதிகளில் நாய் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கலிப்புல்லாநகர் பகுதியில்  முஸ்லிம்களுக்கு மையவாடி இல்லாமல் பல வருடங்களாக சிரமப்படுகிறார்கள் 5 கீ.மீ தொலைவில் சென்றுதான் அடக்கம் செய்யும் அவல நிலை  தொடர்கிறது.   மையவாடி அமைத்தர  சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 இதில் சதக்கத்துல் ஜாரியா (நிலையான தர்மம்) என்ற அடிப்படையில் 300 மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. அரங்கில் மதர்ஸா மாணவ, மாணவிகள் கண்காட்சி யை ஏற்பாடு செய்திருந்தனர்.  இதில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நிகழ்ச்சி,ஜனாஸா (பிரேதம்) குளிப்பாட்டுதல், கபனிடதல் பயிற்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள்    முகமது இஸ்மாயில், முகம்மது அலி, முகமது ஆரீப் ஆகியோர் செய்திருந்தனர். இதில், 500 -க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Top