07/Mar/2021 03:32:16
புதுக்கோட்டை, மார்ச்: மிகவும் பிற்படுத்தப்பட்டோருகான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதலீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ்நாடு வீர சைவர் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழ்நாடு வீர சைவ முன்னேற்ற சங்க மாநில பொதுத்தலைவர் அருள் தெரிவித்தார்.
தமிழ்நாடு வீர சைவ முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு வீரசைவர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசின் எம்பிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை சிதைத்துள்ளதை கண்டித்து பொது கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாநில பொது தலைவர் அருள் மேலும் கூறியதாவது: எங்கள் வீரசைவ பண்டார இனத்திற்கு கொடுக்கப்பட்ட 20 சதவீத எம்பிசி ஒதுக்கீட்டில் 10.5% இட ஒதுக்கீடு வழங்கி தற்பொழுது ஆண்டு கொண்டிருக்கின்ற அரசு பெரும் துரோகத்தை செய்துள்ளது. இதனைக் கண்டித்து, தமிழகத்திலுள்ள வீரசைவர் இனத்தில் 22 உட்பிரிவு களைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேரும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறோம் .
தேர்தலில் நிற்கக்கூடிய ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி எவருக்கும் நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை . எங்களுக்கு ஆதரவாக யார் இருகிறார்களோ அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு இருக்கும். தமிழகம் முழுதும் 50 லட்சத்துக்கும் அதிகமாக வசிக்கும் வீரசைவ உறவுகளில் பலரும் பல்வேறு விதமான அமைப்புகளாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது முடிவு செய்து இருக்கின்றோம்
மேலும் அடுத்தகட்ட போராட்டமாக அந்தந்த மாவட்டங்களில் எங்களுடைய குடியுரிமை அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.