logo
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ.22.56 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ.22.56 லட்சம் அபராதம் வசூல்

28/Feb/2021 06:21:26

ஈரோடு, பிப்:ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வந்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது பேதமின்றி அனைவரையும் தாக்கியது.

முன்கள பணியாளர்களான போலீசார், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஆனால் வெளியே வரும் மக்கள் முக கவசம் அணிந்து வந்தனர். சமூக இடைவெளியும் கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் இருந்தால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, பெரிய நிறுவனங்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில்  எச்சரிக்கப்பட்டிருந்தது.

 இதைத் தொடர்ந்து வருவாய் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரத் துறையினர், போலீசார் ஆகியோர் ஒன்றிணைந்து மாவட்டம் முழுவதும் அவ்வப்போது ஆய்வு நடத்தி வந்தனர். இதில் தினமும் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோர் முக கவசம் அணியாமல் வந்து அபராதம் செலுத்தினர். 

இதே போல் பொது இடங்களில் சமூக இடைவெளி, எச்சில் துப்புவது போன்றவற்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.22 லட்சத்து 56 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Top