22/Feb/2021 08:49:12
ஈரோடு, பிப்: ஈரோடு, அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை, சூரம்பட்டி, சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் விசைத்தறிகளில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. உற்பத்தி செய்யப்படும் ரயான் ரகம் குஜராத், மகாராஷ்டிரம் போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபகாலமாக ரயான் நூல் விலை உயர்ந்த அளவுக்கு ரயான் துணி ரகம் உயரவில்லை.
இதனால் ரயான் ரகம் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. ஈரோடு பகுதியில் உள்ள 30,000 விசைத்தறியில் நாள் ஒன்றுக்கு சுமார் 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தொடர் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ரயான் ரக உற்பத்தியை 11 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது என்று கடந்த வாரம் விசைத்தறியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் பிப்.21 வரை 11 நாட்களுக்கு ரயான் உற்பத்தி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் மூலம் 30,000 விசைத்தறியில் நாள் ஒன்றுக்கு சுமார் 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. நாள் ஒன்ருக்கு ரூ.7.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த 11 நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தால் ரூ. 82 கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கிப்போனது. இந்நிலையில் மீண்டும் விசைத்தறி கூடங்களில் ரயான் உற்பத்தி தொடங்கியது. விசைத்தறி கூடங்களில் வழக்கம்போல் ரயான் உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.