logo
எலிக்கு வைக்கும் விஷத்தை உண்ணும்  மயில்கள்  உயிரிழந்தால்  விவசாயிகள் மீது வழக்கு பதிவை  தடுக்க வேண்டும்: ஈரோடு வேளாண் குறைதீர் கூட்டத்தில்  விவசாயிகள் கோரிக்கை

எலிக்கு வைக்கும் விஷத்தை உண்ணும் மயில்கள் உயிரிழந்தால் விவசாயிகள் மீது வழக்கு பதிவை தடுக்க வேண்டும்: ஈரோடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

19/Feb/2021 05:47:04

ஈரோடு, பிப்: எலிகளை அழிக்க வைக்கும் விஷத்தை  மயில்கள் சாப்பிட்டு  உயிரிழந்தால்  விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்வதைத் தடுக்க வேண்டும் என ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில்  விவசாயிகள்  ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது

 சொட்டுநீர்பாசனத்திற்கான மானியத்தை ஒன்றரை லட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும். மஞ்சள், மரவள்ளிக் கிழங்கிற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். காலிங்கராயன் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக செயல்படும் சாய, சலவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிங்கராயன் கால்வாய் நீரில் மாசு குறித்து அறிய பொருத்தப்பட்ட தானியங்கி கருவியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

 வேளாண் பொறியியல்துறை மூலம் மஞ்சள் அறுவடை இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மஞ்சள் தரம் அறியும் கருவியினை கிராமம்தோறும் கொண்டு சென்று பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு இடங்களில் நடக்கும் மஞ்சள் ஏல விற்பனையை ஒரே இடத்தில் நடத்த வேண்டும்.

 நில அளவையர் பற்றாக்குறையால், கூட்டுப்பட்டாக்களை, தனிப்பட்டாக்களாக பிரித்து வழங்க முடியாத நிலை உள்ளது. எலிகளால் விவசாயப் பயிர்கள் சேதமாகிறது. எலிக்கு வைக்கும் மருந்தினை உண்ணும் மயில்கள் இறந்தால், விவசாயிகள் மீது வழக்கு பதிவாகிறது. இதைக் கைவிட வேண்டும்.  பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேளாண்பல்கலைக்கழக உதவியுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

கீழ்பவானி வாய்க்காலில் ரூ 750 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். சுற்றுச் சூழலுக்கு விரோதமான இந்த திட்டத்தை ஏற்கெனவே 2011-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். கான்கிரீட் தளம் அமைத்தால், கசிவுநீர் மூலம் பாசனம் பெறும் நிலங்கள் பாதிக்கப்படும்.  ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெற்றிருந்த ரூ 824 கோடி பயிர்கடனை ரத்து செய்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

 கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது: கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு வேளாண் குறைதீர் கூட்டம் நடந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுமாயின், அடுத்த மாதம் இக்கூட்டம் நடைபெறாது. இருப்பினும், விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மற்றும் தொலைபேசி, வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். காலிங்கராயன் கால்வாயில் தானியங்கி முறையில் மாசு கண்டறியும் கருவியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top