logo
ஈரோட்டில் 2-ஆவது நாளாகத் தொடரும்  வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஈரோட்டில் 2-ஆவது நாளாகத் தொடரும் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

18/Feb/2021 06:46:02

ஈரோடு, பிப்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை: அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும்.

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய நிலையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப்.17 முதல்   தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வியாழக்கிழமை  2-வது நாளாக தொடர்ந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 390 வருவாய்த்துறை அலுவலர்கள்  ஈடுபட்டுள்ளனர். இதனால் ஈரோடு தாலுகா அலுவலகம், ஆட்சியக் அலுவலகம் பணியாளர்கள் இல்லாமல்  வெறிச்சோடி காணப்பட்டது.

Top