logo
பட்டாசு ஆலை விபத்து: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

பட்டாசு ஆலை விபத்து: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

13/Feb/2021 09:08:19

சென்னை: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் விடுத்து அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில்  12.2.2021 ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த வெடி விபத்தில் 36 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

 

கோடைக்காலம் விரைவில் தொடங்க இருப்பதாலும், கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். 2 இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் அறிவிப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு நேரிட்டது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.


Top