04/Dec/2020 06:31:54
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அவ்வப்போது மழை பெய்வதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது.
ஈரோடு மாநகர் பகுதி, கொடுமுடி ,சத்தியமங்கலம் என மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்த வந்ததது. இந்தத் தொடர் சாரல் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. காலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்தது. காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 2-ஆவது நாளாக பலத்த மழை பெய்துள்ளது.
இதைப்போல் அணைப்பகுதிகளான குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: கொடுமுடி - 8.6, சத்தியமங்கலம் - 6, பவானி - 5.4, கொடிவேரி - 5.2, குண்டேரிபள்ளம் - 5, ஈரோடு - 5, தாளவாடி - 4, மொடக்குறிச்சி - 4, பவானிசாகர் - 3.8, சென்னிமலை - 3, பெருந்துறை - 3, கோபி - 3, அம்மாபேட்டை-2.6,நம்பியூர் - 2, வரட்டுப்பள்ளம் - 1.2.