logo
ஈரோடு மாவட்டத்தில்  3.63 லட்சம் பேருக்கு  கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் 3.63 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

09/Feb/2021 04:58:43

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3.63 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர்,மாநகராட்சி ஆகியோர் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 அதன்படி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தினமும் 2 ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் நோய் பாதித்தவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோய்களின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எவ்வித அறிகுறியும் இன்றி நோய்த் தொற்றால் பாதித்தவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்தனர்.இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.

 தற்போது தினமும் 1400 முதல் 1600 வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ரோடு மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

 சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள  புள்ளிவிவர பட்டியல்படி, ஈரோடு  மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 526 ஆக உயர்ந்தது.

ஒரே நாளில் 10 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 193 ஆக உயர்ந்தது.கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 183  பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Top