09/Feb/2021 06:20:04
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து இயக்குநர் வெற்றிமாறன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஸ்வீடனைச் சோ்ந்த சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பா்க், பாடகியும் நடிகையுமான ரியானா உள்ளிட்ட பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள்.
விவசாயிகள் போராட்டம் பற்றிய ஒரு செய்தியைப் பகிர்ந்து, இதைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார் ரியானா. இதைத் தொடர்ந்து, கிரிக்கெட் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் பாடகி ரியானாவின் கருத்துக்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தனது முகநூல் பக்கப் பதிவில்:
போராட்டம் என்பது செவிசாய்க்கப்படாத கோரிக்கைகளை உடைய மக்களின் வெளிப்பாடு. அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கியவர்கள் மக்கள். அது, மக்களின் நலனைக் காக்க வேண்டும். பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது. நாட்டின் ஆன்மாவைக் காக்க விவசாயிகள் முயல்கிறார்கள். தங்களின் உரிமைகளுக்காக போராடுவதும் அப்போராட்டத்துக்கு ஆதரவளிப்பதும் ஜனநாயகமாகும் என்று கூறியுள்ளார்.